|
இந்த தேர்தலை, தேர்தல் வெற்றி என்பதைவிட அமோக வெற்றித் தேர்தல் எனலாம்! இடைவிடாத முயற்சி + நம்பிக்கை இதுவே அஇஅதிமுகவின், பொதுச் செயலாளரும், இன்றைய முதலவருமான ஜெயலலிதா அவர்களின் வெற்றிக்கனி. இந்தத் தேர்தல் வெற்றியில் தேர்தல் கமிஷனின் உண்மையான ஒத்துழைப்பும், அயராத கண்காணிப்பும் உண்மையிலேயே போற்றத்தக்கது! தமிழக மக்களை சூது கவ்வாமல், தருமம் வெல்லத் துணை இருந்த தேர்தல் கமிஷனருக்கு நல் வாழ்த்துக்கள்! இந்தப் புதிய தனிப் பெரும் மாற்றம், ஏழைகளுக்கும், பின் தங்கியோர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிராமணர்களுக்கும், சாதிமத பேதமற்றதாக வரப் போகும் ஒரு நல்லாட்சிக்குமான வெற்றி! மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற்ற முதல்வருக்கு, வரப் போகும் சில மாதங்கள் ஒரு சவாலாகவே இருக்கும்! ஆட்சியில் நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும் உகந்த படித்த இளைஞர்களை அமைச்சராக தேர்ந்தெடுப்பதும், நலிந்து, சீர்குலைந்து போன ஆட்சி முறையை சீரமைப்பதிலும், காலியான கஜானாவை மீண்டும் நன்முறையில் நிதானமாக நிரவி, ஏழைகளுக்கு உணவுப் பண்டங்கள் உரிய முறையில் கிடைக்க, விலைவாசிப் பட்டத்தை வானத்திருந்து பூமிக்கு கொணர்வதும் தான் முதல் சவால்! கடந்து போன விஷயங்கள் முடிந்தவை, இனி துன்பக் கனவுகளை பேசி, மனதை வருத்தினால் இன்றையப் பொழுது வீணாகிவிடும். போனவை போகட்டும்! முதல் அமைச்சராக மீண்டும் தன் தமிழ்நாடு குடும்பத்திற்கு வந்து சேர்ந்துள்ளார் ஜெயலலிதா. அதே சமயம் கடந்த முறை ஏற்பட்ட சறுக்கல்களை சரி செய்து தம் குடும்பத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார் என எதிர்பார்ப்போம்! மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கைக்கும் மீண்டும் பாத்திரமாகி உள்ள முதல்வர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்களின் + மகேசனின் + திருவரங்கனின் மகிழ்ச்சியான நல்வாழ்த்துக்கள்!!! தேர்தல் 2011 என எட்டுப் பத்தியில் இன்றைய இளைஞர்களுக்காக எழுதியவைகள், அவர்களைச் சென்றடைந்து, இளைஞர்கள் தங்களின் ஒளிமயமான எதிர்காலத்தை நன்முறையில் மாற்றியதற்கு, தமிழக இளைஞர்களுக்கு நல்வாழ்த்துக்கள்! மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு!!
|