|
சென்னை, ஜனவரி 10: தமிழகத்தில் தானே புயலால் பாதிப்பை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழுவினர் இதுபோன்றதொரு பாதிப்பை தாங்கள் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட பேரழிவை சரிசெய்ய அதிக அளவில் நிதியும், ஆள்பலம் மற்றும் கருவிகளும் தேவை. இதற்கு மத்திய அரசின் உதவி பெருமளவில் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரழிவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி ஏற்கனவே பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தேசிய பேரழிவாக அறிவித்து தமிழக அரசு கோரியுள்ள ரூ 5249 கோடி நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
|