|
சென்னை, ஜனவரி 20: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி உதவி வழங்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புயல் தாக்கி 22 நாட்கள் ஆகியும் கடலூர் மாவட்டத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. பல கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.
புயல் பாதிப்புகளை முழுமையாக சரிசெய்ய ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி உதவி தேவை என்று மத்திய அரசை, தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசோ முதல் கட்டமாக ரூ.500 கோடி மட்டுமே நிதி வழங்கியுள்ளது.
மத்தியக் குழுவினர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தங்கள் ஆய்வினை முடித்து 10 நாட்களுக்கு மேலான போதிலும் இதுவரை இரண்டாம் கட்ட நிதியுதவியை மத்திய அரசு வழங்கவில்லை.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கும்,மேற்கு வங்கத்துக்கும் மட்டும் கேட்பதற்குள் நிதியுதவி வழங்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு முழுமையான இழப்பீட்டை இன்னும் வழங்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்துக்குத் தேவையான இழப்பீட்டை உடனடியாக வழங்கும்படி பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வலியுறுத்த வேண்டும்.
இத்தகைய நெருக்கடியான நேரத்தில்,புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் தமிழக அரசின் முயற்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.
அந்த வகையில் தானே புயல் பாதிப்புக்காக தமிழக முதல்வரால் திரட்டப்படும் நிதிக்கு, பாட்டாளி தொழிற் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
|