Tamil Nadu News

நியாயமான வெற்றி: கி.வீரமணி

சென்னை, ஜனவரி 24: மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர்களை அ.தி.மு.க. அரசு பணிநீக்கம் செய்து ஆணை பிறப்பித்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது சமூகநீதிக்குக் கிடைத்த நியாயமான வெற்றியாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர்களையும் அ.தி.மு.க. அரசு பணிநீக்கம் செய்து ஆணை பிறப்பித்தது செல்லாது என்றும், மீண்டும் அவர்கள் பணிக்குச் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பளித்து, இந்த 13,500 பேர்களின் குடும்பங்களையும் வாழவைத்துள்ளது.

இது சமூகநீதிக்குக் கிடைத்த நியாயமான வெற்றியாகும்.

இந்த எண்ணிக்கையினரில் 50 விழுக்காடு மகளிர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்கள் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர்.

நியாயமாக இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் நீதிமன்றம் சென்றவுடன், சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை ஆணையிட்டபோதே, இவர்கள் பணியில் தொடருவதாகத்தான் பொருள். மீண்டும் அவர்களை அமரவிடாமல் தடுத்ததே நீதிமன்ற அவமதிப்பு (ஒருவகையில்) ஆகும்.

அதன்பின் தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றபோது அங்கே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் மனிதநேயம் அற்ற இந்தச் செயலுக்கு வன்மையான கண்டனக்குரல் எழுப்பி, திரும்பவும் சென்னை உயர்நீதி மன்றத்தினையே விசாரித்துத் தீர்ப்பளிக்கச் செய்தனர்!

“ஒரு அரசு நியமித்த ஊழியர்களை இன்னொரு அரசு நீக்கவேண்டுமா?” என்றும், “தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது? என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டதோடு, ‘ஒரு அரசு மாறினால் முந்தைய அரசின் திட்டங்களை ரத்து செய்யவேண்டுமா?‘ என்றும் சூடாகக் கேள்விகளை எழுப்பி திருப்பி சென்னை உயர்நீதிமன்றத்திற்கே அனுப்பியதில் இறுதித் தீர்ப்பு நேற்று நீதிபதி சுகுணா அம்மையார் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இவர்களை உடனடியாகப் பணியில் அமர்த்தி கடமையாற்றிடச் செய்யவேண்டும்.

இதற்கு முன் இது போலவே சாலைப் பணியாளர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களையும் அவர்கள் ‘‘தி.மு.க. அரசால் நியமனம் செய்யப்பட்டவர்கள்’’ என்பதால் நீக்கி வறுமையால் பலர் வாடிடவும், பிச்சை எடுக்கவும், தற்கொலை செய்து கொண்டும், பட்டினியால் இறந்ததுமான துன்பத்தை  அனுபவித்ததை எளிதில் தமிழ்நாடு மறக்க முடியாதே!

எனவே மகளிர் நலம், சமூகநீதி, நியாயம், மனிதநேயம் ஆகிய கண்ணோட்டத்தில் உடனடியாக அவர்களை பணியில் அமர்த்திட முன்வரவேண்டும் தமிழ்நாடு அரசு.

உச்ச, உயர் நீதிமன்றங்களில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக அண்மையில் விமர்சிக்கப்பட்ட கருத்துகளைப்பற்றி விருப்பு, வெறுப்பு இன்றி யோசிக்க வேண்டும். இனி மேலாவது இந்தப் போக்கை தமிழ்நாடு அரசு கைவிடவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

செம்மொழி நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலக, தமிழக சட்டமன்றம் இடமாற்றம் பற்றியும் தம் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய முன் வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Jan 24, 2012
More News

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
 
 
More Tamil Nadu News
 
 
 
Top Stories
 
Photo Gallery
 
Videos

Trailer of 'Nanban'

Guests at chennailivenews prize distribution ceremony