|
புதுதில்லி, ஜனவரி 24: தானே புயல் பாதிப்புக்காக தமிழகத்துக்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
தானே புயல் நிவாரணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி எழுதியிருந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், தானே புயலால் பாதிப்புக்குள்ளான தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக 500 கோடி ரூபாயும், புதுச்சேரி மாநிலத்திற்கு 125 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்ட மத்திய குழு, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்ததும், அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு தேவையான நிதி முழுமையாக வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக என்னென்ன உதவிகள் வேண்டுமோ, அவை அனைத்தையும் மத்திய அரசு வழங்கும் என்றும், தமது கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
|