|
சென்னை, ஜனவரி 24: குடியரசு தினத்தையொட்டி, முதல் முறையாக, டாஸ்மாக் கடைகள் ஜனவரி 26ம் தேதி மூடப்படுகின்றன.
திருவள்ளுவர் தினம், மிலாது நபி, வள்ளலார் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகிய நாட்களில், டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. இவற்றோடு, "தொழிலாளர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தினங்களிலும், டாஸ்மாக் கடைகள் இயங்கக் கூடாது" என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
இதையடுத்து, குடியரசு தினத்தையொட்டி, முதல் முறையாக, டாஸ்மாக் கடைகள் ஜனவரி 26ம் தேதி மூடப்படுகின்றன. இது குறித்து, டாஸ்மாக் நிறுவன பொதுமேலாளர் கணேசன் கூறும்போது, "தமிழகம் முழுவதும் உள்ள, டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அவற்றைச் சார்ந்த பார்கள் நாளை மறுதினம் இயங்காது. இந்த அறிவிப்பை மீறி மதுபானம் விற்போர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.
இதனால் 'குடிமகன்கள்' சோகத்துக்கு உள்ளானாலும், தேவையான அளவு மதுபானங்களை வாங்கி இருப்பில் வைத்துக்கொள்வதற்காக டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
|