|
சென்னை, ஜனவரி 27: முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி வீசிய தானே புயலால் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த புயலுக்கு 48 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூர் மாவட்டம் தற்போது தான் ஓரளவு மீண்டு வந்து கொண்டிருக்கிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி வருகிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத் தான் சந்தித்தேன். எனது உடல் நலம் தேற வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி கூறினேன்" என்று தெரிவித்தார்.
|